Investment in Real Estate? A Report!
- Feb 22, 2024
- 2 min read
Updated: Jan 20, 2025
இந்தியக் குடும்பங்கள் அதிகம் வாங்கும் சொத்து இதுதான்! சிந்திக்க வைக்கும் ரிப்போர்ட்!

இந்தியக் குடும்பங்கள் மிக அதிகமாக வாங்கும் சொத்து என்ன? மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சர்பிரைஸ் தகவல்.
இந்தியக் குடும்பங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் முதலீடு செய்துவருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் பொருளாதார விவகாரத் துறை மாதாந்தர பொருளாதார ஆய்வறிக்கையை
வெளியிட்டுள்ளது. அதில், 2012-ம் நிதியாண்டு முதல் 2020-ம் நிதியாண்டு வரையிலான காலத்தைவிட 2022-ம் நிதியாண்டில் இந்தியர்கள் அதிக அளவில் வீடு, வாகனம் போன்ற சொத்துகளை வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்குச் சான்றாக, வீட்டுக் கடன்களின் அபார வளர்ச்சியை நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தகவல்படி, 2022-23 நிதியாண்டில் இந்திய வீடமைப்பு துறைக்கான கடன்கள் 36.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் வாகனக் கடன்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2022-23 நிதியாண்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய சிறு கடன்களின் மதிப்பு 29.6% உயர்ந்துள்ளது. இந்த சிறு கடன்களில் 36% தொகை வாகனங்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்தியக் குடும்பங்களுக்கு வழங்கிய கடன்களின் மதிப்பு 2022-ம் நிதியாண்டில் 20,000 கோடி ரூபாயில் இருந்து 2023-ம் நிதியாண்டில் 2.4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட கடன்கள் 11.2 மடங்கு உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரிப்போர்ட் கூறுவது என்ன?
நிதி அமைச்சகத்தின் அறிக்கை ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையுடன் ஒப்பிட்டால், ஒன்று போலவே இருக்கிறது. ஏனெனில், இந்த அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு வெளியிட்ட அறிக்கையின்படி, வீடமைப்பு துறைக்கான கடன்கள் ஆகஸ்ட் மாதத்தில் 13.8% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வாகனக் கடன்களும் 20.6% இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கிரெடிட் கார்டு கடன்களோ ஆகஸ்ட் மாதத்தில் 30% வளர்ச்சி அடைந்துள்ளன.
இந்திய குடும்பங்கள் வீடுகளை அதிகம் வாங்க காரணம் என்ன?
வீடுகளின் விலை உயர்ந்து வருவதே வீடுகளில் அதிக முதலீடுகள் வருவதற்கான காரணமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அனைத்திந்திய வீட்டு விலை குறியீட்டின்படி, கடந்த ஜூன் காலாண்டில் வீடுகளின் விலை முந்தைய ஆண்டைவிட 5.1% உயர்ந்துள்ளது. இதனால், வீடுகளுக்கான டிமாண்டும் உயர்ந்து வருவதாக நிதி அமைச்சகத்தின் ரிப்போர்ட் கூறுகிறது.
வீடுகளில் குவியும் முதலீடுகள்:
2022-ம் நிதியாண்டில் மொத்த நிலையான மூலதனத்தில் 40.4% வீடுகளில் மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக 34.9% மூலதனம் தனியார் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக 24.7% மூலதனம் பொதுத் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடும்பங்கள் வீடுகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதால், வீடுகளில் இன்னும் அதிகமான முதலீடுகள் குவியும் என நிதி அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.






Comments